பலங் கொண்ட
காற்று
தலையில்
மண் தூற்றியபோது
வராத கோபம்
ஏன் வந்தது நான் தூற்றியபோது
என் நண்பனுக்கு
அரக்கத்தனம் கொண்ட
ஆழிப் பேரலை
வீட்டை
நொறுக்கியபோது
வராத கோபம்
என் பந்து பட்டு
ஜன்னல் உடைந்தபோது
ஏன் வந்தது
என் அண்டை வீட்டானுக்கு
அர்த்த ராத்திரியில்
வீசும்
நிலவொளி
மீது வராத கோபம்
நான் ஏற்றிய
விளக்கினால்
ஏன் வந்தது
என் துணைக்கு
இடி சத்தத்திற்கு
வராத கோபம்
என்
இடிச் சிரிப்பிற்கு
ஏன் வந்தது
என் தந்தைக்கு
மரக்கிளை
முறிந்து
மண்டை உடைந்தபோது
வராத கோபம்
ஏன் வந்தது
ஆசிரியர் பிரம்பால்
அடித்தபோது
எனக்கு
இயற்கையின்
மீது
கோபமில்லையென்றால்
நாமும்
இயற்கைதானே..
என் ஜனமும்
மரணமும்
இயற்கைதானே..
கோபம் கொள்ளாதீர்
மனித இயற்கை மீது
No comments:
Post a Comment